இனி, அவர்கள் பசித்திருக்க மாட்டார்கள்!

முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட பாணியில், சென்னையில் உள்ள ஆதி திராவிட நலக் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு, 3 வேளையும் சுவையான உணவை ‘மையப்படுத்தப்பட்ட சமையலறைகள்’ மூலம் வழங்க (Centralised kitchens) தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது, அவ்விடுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளிகளை நம்பியுள்ள ஏழைமக்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தையர், அதிகாலையில் எழுந்து பசியோடு அன்றைய தின வேலைக்கு சென்றுவிடும் நிலையில், அவர்களின் குழந்தைகள் காலை நேரத்தில் அதே பசியுடன் பள்ளிக்கு வந்து கல்வி பயிலும் நிலை இருந்தது. இதனால் அவர்களின் குழந்தைகளும் பசியோடு பள்ளிகளுக்கு வரும் நிலை இருந்தது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடுகளை மாணவர்கள் சந்திப்பதாக அரசுக்கு அறிக்கை வந்தது.

அதனைத் தொடர்ந்து, இதற்கு தீர்வு காணும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே முதல்முறையாக அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சுவையான காலை உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரையில் சாத்தியமுள்ள இடங்களில், மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் உணவு தயாரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் உணவு எடுத்துச் செல்லப்பட்டு, சுடச்சுட வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவித்த நிலையில், பல்வேறு மாநிலங்களும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அதே பாணியில் சென்னையில் உள்ள 22 ஆதி திராவிட நலக் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள 2,500 மாணவர்களுக்கு உணவு தயாரிக்க, இரண்டு மையப்படுத்தப்பட்ட சமையலறைகளை அமைக்க ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறை திட்டமிட்டுள்ளது.

இந்த விடுதிகளில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்கள், விடுதிகளில் தங்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுவை குறித்து புகார் கூறிய நிலையில், அரசின் கவனத்துக்கும் அது கொண்டு வரப்பட்டது. மேலும், கல்லூரிகளின் வெவ்வேறு நேரங்கள் காரணமாக, விடுதிகளில் தங்கியிருக்கும் பல மாணவர்கள் மதிய உணவை சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் பசியுடன் இருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.

இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் விதமாகவே, இந்த விடுதி மாணவர்களுக்கான 3 வேளை உணவையும் மையப்படுத்தப்பட்ட சமையலறைகள் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜி லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.

“சுகாதாரமான சமைத்த உணவை வழங்குவதே எங்கள் நோக்கம். இதற்காக வெவ்வேறு அமைப்புகளால் நடத்தப்படும் பல்வேறு விடுதிகளின் உணவு மெனுவை நாங்கள் பார்த்து வருகிறோம் ” என மேலும் கூறுகிறார் லட்சுமி பிரியா.

மையப்படுத்தப்பட்ட சமையலறைகளுக்கும் ஹாஸ்டலுக்கும் அதிகபட்ச தூரம் எட்டு கி.மீட்டர் ஆக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு டெலிவரி வாகனம் குறிப்பிட்ட தூரத்துக்கு, ஒன்றரை மணி நேரத்திற்குள் சென்று திரும்பும். சமையலுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இதர மூலப்பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெறவும், மாணவர்களின் ஊட்டச்சத்து வளர்ச்சியைக் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மையப்படுத்தப்பட்ட சமையலறைகள் சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி ஆண்கள் விடுதியிலும், வேப்பேரியில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலக் கல்லூரி பெண்கள் விடுதியிலும் செயல்படும். வருகிற ஜனவரி மாதத்துக்குள் இந்த சமையலறைகள் தயாராகிவிடும் என்பதால், அப்போது முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் சென்னையைத் தொடர்ந்து இதர மாவட்டங்களுக்கும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பெருமகனைப் போற்றி நடக்கும் ஆட்சி மாணவர்களைப் பசித்திருக்க விடுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct guerre au proche orient : après la mort de 4 soldats israeliens, …. Fsa57 pack stihl. © 2024 eco bois confort chaleur, qualité, confiance.