கொலம்போவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 19-வது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. கொலம்போவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் ப்ரியன் பென்னெட் மற்றும் தடிவனஷெ ஆகியோர் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இதில் தடிவனஷெ 21 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் புரி 30 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் சிக்கந்தர் ராஸா தன் பங்கிற்கு 25 ரன்கள் சேர்க்க, மறுபுறம் அபாரமாக ஆடிய ப்ரியன் பென்னெட் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 64 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது.

