வக்ஃபு சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கில், மே 5 ஆம் தேதி தேதி வரை மத்திய வக்ஃபு கவுன்சில் அல்லது மாநில வக்ஃபு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவுக்கு இஸ்லாமிய தரப்பினரிடையே வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்ஃபு (திருத்த) சட்டம் (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) கடந்த 8 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ” இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது என்றும், இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை புதன்கிழமை தொடங்கியது. நேற்றைய விசாரணையின்போது, 3 முக்கிய அம்சங்களை நீதிபதிகள் எழுப்பினர். வக்ஃபு திருத்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இடைக்கால தடை விதிப்பதற்கு மத்திய அரசும் சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வியாழன் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியதும், இந்த வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தினார். இந்த சட்டத்தின் சில விதிகளை நீதிமன்றம் நிறுத்தி வைத்தால் அது ஒரு “கடுமையான நடவடிக்கையாக” இருக்கும் என்றும் அவர் தனது வாதத்தின் போது கூறினார்.
அப்போது தலைமை நீதிபதி சஞ்சய் குமார், “சட்டத்தின் சில விதிகள் நிறுத்தி வைக்கப்படாவிட்டால், களத்தில் நிலைமை மாறக் கூடும். பொதுவாக, ஒரு சட்டத்தை நிறுத்தி வைப்பது அரிது. ஆனால், நிலைமை கடுமையாக மாறக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறினார். அதற்கு, “அடுத்த விசாரணை தேதி வரை வக்ஃபு (திருத்தம்) சட்டம், 2025-இன் பிரிவு 9 மற்றும் 14-இன் கீழ் மத்திய வக்ஃபு கவுன்சில் அல்லது மாநில வக்ஃபு வாரியங்களுக்கு எந்த நியமனங்களும் செய்யப்படாது” என சொலிசிட்டர் ஜெனரல் உத்தரவாதம் அளித்தார்.
அச்சத்தை தணித்த இடைக்கால உத்தரவு

அவரது இந்த உத்தரவாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், அதனையே தனது இடைக்கால உத்தரவாக பதிவு செய்தது.
மேலும், பயனர் சொத்துகளின் வக்ஃபு சொத்துக்கள் அனைத்தும் அடுத்த விசாரணை தேதி வரை ரத்து செய்யப்படக் கூடாது என்றும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை மே 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அத்துடன், இந்த வழக்கில் மத்திய அரசு தனது பதில் மனுவைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. வக்ஃபு (திருத்த) சட்டத்தின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு, இஸ்லாமிய சமூகத்தினரின் உடனடி அச்சங்களை தணித்துள்ளது.
இருப்பினும், இந்த சட்டத்தைச் சுற்றிய அரசியல் மற்றும் சமூக பதற்றங்கள் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை நீடிக்கவே செய்யும் என்பதால், இந்த வழக்கில் வழங்கப்படும் விரைவான தீர்ப்பே அதனை தணிக்கும்!