தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (நேர்முகத் தேர்வு பதவிகள்) குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள கணக்கு அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர், உதவி மேலாளர், முதுநிலை அலுவலர் மற்றும் மேலாளர் உள்ளிட்ட 76 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (டிசம்பர் 22, 2025) முதல் தொடங்கியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in வழியாக விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். கல்வித்தகுதியைப் பொறுத்தவரை, வேளாண்மை உதவி இயக்குநர் பணிக்கு வேளாண்மை விரிவாக்கம் அல்லது வேளாண்மை பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணக்கு அலுவலர் மற்றும் மேலாளர் பணிகளுக்கு இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) அல்லது செலவுக் கணக்காளர்கள் நிறுவனம் (ICWA) நடத்தும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், முதுநிலை அலுவலர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பு (LLB) முடித்திருக்க வேண்டியது அவசியமாகும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் ஜனவரி 20, 2026-க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், ஜனவரி 24 முதல் ஜனவரி 26 வரை திருத்தம் செய்துகொள்ள கால அவகாசம் வழங்கப்படும். இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு மார்ச் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அரசு வேலைக்காகக் காத்திருக்கும் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி பயின்ற மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

