பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
அந்த வகையில், நேற்று (ஜனவரி 15) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 16) பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல், பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை (ஜனவரி 17) நடைபெற உள்ளது. இதற்காக அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் முன்னதாகவே நடத்தப்பட்டு, தகுதியான வீரர்கள் களத்தில் காளைகளை அடக்கி வருகின்றனர்.
பாரம்பரிய வழக்கப்படி, முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முறைப்படி தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

