2026-ன் முதல் சூரிய கிரகணம்,வரும் 17-ம் தேதி வானில் தோன்றப்போகும் அரிய ‘நெருப்பு வளையம்’
அறிவியல் மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 2026-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், வரும் பிப்ரவரி 17-ம் தேதி மாசி மாத அமாவாசை அன்று நிகழவிருக்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி மறைக்கப்பட்டு பூமியில் நிழல் விழுகிறது. இம்முறை சந்திரன் சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைப்பதால், அதன் விளிம்புப் பகுதிகள் ஒரு பிரகாசமான ஒளிவட்டம் போலக் காட்சியளிக்கும். இதனாலேயே இந்த அரிய நிகழ்வு ‘நெருப்பு வளையம்’ (Ring of Fire) என்று அழைக்கப்படுகிறது. இந்திய நேரப்படி மதியம் 3:26 மணிக்குத் தொடங்கி மாலை 7:57 மணி வரை நீடிக்கும் இந்த கிரகணத்தின் உச்சக்கட்ட வளையக் காட்சியை, அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை ரசிக்க முடியும்.
இந்த வானியல் அதிசயம் தென் ஆப்பிரிக்கா, அண்டார்டிகா மற்றும் தெற்கு அர்ஜென்டினா போன்ற பகுதிகளில் தெளிவாகத் தெரியும். தென் பெருங்கடலில் பயணம் செய்பவர்களுக்கும், ஆய்வு நிலையங்களில் இருப்பவர்களுக்கும் முழுமையான வளையம் தெரியும் நிலையில், தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இருப்பவர்களுக்குச் சூரியன் ஒரு பகுதியை இழந்த ‘கடித்த ஆரஞ்சு பழம்’ போலப் பகுதியாகக் காட்சியளிக்கும். நிலவை விட 400 மடங்கு பெரிய சூரியன், அதே 400 மடங்கு அதிக தொலைவில் இருப்பதால் ஏற்படும் இந்தத் துல்லியமான நிழல் நிகழ்வு, சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவுகிறது. இந்தியாவில் இந்த கிரகணத்தை நேரடியாகக் காண முடியாது என்றாலும், வானியல் ரீதியாக இது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

