Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

12 மணி நேரம் நீடிக்கும் ‘சில்’ காற்று! வழக்கத்திற்கு மாறாகத் தமிழகத்தில் குளிர் அதிகரிக்க இதுதான் காரணமா?

New Project - 2025-12-20T142411.420

தமிழகத்தில் வழக்கமாக மார்கழி மாத இறுதியில் வீசக்கூடிய கடும் குளிர்காற்று, இந்த ஆண்டு கார்த்திகை மாத இறுதியிலேயே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக வீசத் தொடங்கியுள்ளது. பொதுவாக டிசம்பர் மாதக் கடைசியில் உணரப்படும் இந்தக் காலநிலை மாற்றம், இம்முறை டிசம்பர் முதல் வாரத்திலேயே தீவிரமடைந்துள்ளது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இரவு 7 மணிக்குத் தொடங்கும் குளிர்காற்று படிப்படியாக அதிகரித்து, அடுத்த நாள் காலை 7 மணி வரை எனத் தொடர்ந்து 12 மணி நேரம் குளிர் நீடிக்கிறது. இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து வானிலை ஆய்வாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். 

வடமாநிலங்களில் வீசக்கூடிய கடும் குளிர்காற்று, இம்முறை முன்கூட்டியே கிழக்குத் திசை காற்றாக மாறி, தமிழகத்தின் வடக்கு மற்றும் வடகிழக்குத் திசைகளில் வீசத் தொடங்கியிருப்பதே இதற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், தற்போது தமிழகத்தில் பரவலாக மழை இல்லாத காரணத்தால் வானம் மிகவும் தெளிவாகக் காணப்படுகிறது. வளிமண்டலத்தில் மேகக் கூட்டங்கள் குறைவாக இருப்பதால், வான்வெளியில் இருந்து வரும் குளிர்காற்றின் தன்மை நேரடியாக நிலப்பரப்பை வந்தடைகிறது. இதனால் காற்றின் குளிர்ச்சி அதிகமாக உணரப்படுவதோடு, வரும் நாட்களில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது குளிர்காற்றும் மூடுபனியும் மேலும் தீவிரமடையும் என வானிலையாளர்கள் எச்சரித்துள்ளனர். 

இந்தத் திடீர் காலமாற்றத்திற்கு உலகளாவிய காலநிலை மாற்றமே (Climate Change) மிக முக்கியக் காரணம் என்று சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது குறித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், பருவகாலங்கள் அவற்றின் இயல்பான காலநேரத்தில் இருந்து மாறி அமைவது புவி வெப்பமயமாதலின் ஒரு வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே வந்துள்ள இந்தப் பனிக்காலம் இன்னும் சில வாரங்களுக்குத் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version