ஆன்மீகத் தலமான ராமேசுவரத்திலிருந்து தலைநகர் சென்னைக்கு விரைவாகப் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. ராமேசுவரம் – சென்னை எழும்பூர் இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த அதிநவீன ரயில் சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது தமிழக வருகையின் போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தெற்கு ரயில்வே சார்பில் கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் இப்போது ராமேசுவரமும் இணைய உள்ளது.
ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு தற்போது சேது எக்ஸ்பிரஸ், பாம்பன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டாலும், அவை அனைத்தும் இரவு நேர ரயில்களாகவே உள்ளன. இதனால் பகல் நேரத்தில் சென்னைக்குச் செல்ல ஒரு விரைவு ரயில் வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்தது. மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்று, ரயில்வே வாரியம் ராமேசுவரம் – சென்னை இடையே வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் வந்தே பாரத் ரயிலை இயக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
புதிய வந்தே பாரத் ரயில் (வண்டி எண் இன்னும் அறிவிக்கப்படவில்லை) ராமேசுவரத்திலிருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.20 மணிக்குச் சென்னை எழும்பூரைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு ராமேசுவரம் வந்தடையும். இந்த ரயில் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் மற்றும் தாம்பரம் ஆகிய முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். இந்தச் சேவையின் மூலம் தென் மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகக் குறுகிய காலத்தில் சென்னைக்குச் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

