ரயில் பயணிகளிடையே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே துறை ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இனி ‘ரயில்ஒன்’ (RailOne) செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத (Unreserved) டிக்கெட்டுகளை எடுக்கும் பயணிகளுக்கு, மொத்த கட்டணத்தில் 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அனைத்து விதமான டிஜிட்டல் கட்டண முறைகளையும் (UPI, Debit/Credit Cards, Net Banking) பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தச் சிறப்பு சலுகைத் திட்டம் வரும் ஜனவரி 14, 2026 முதல் ஜூலை 14, 2026 வரை ஆறு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண டிக்கெட் கவுண்டர்களில் வரிசையில் நிற்பதைத் தவிர்த்து, பயணிகள் எளிதாகச் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை காலத்திலேயே இந்தச் சலுகை தொடங்குவது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், ஏற்கனவே ரயில்ஒன் செயலியில் உள்ள ‘ஆர்-வாலெட்’ (R-Wallet) மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத கேஷ்பேக் (Cashback) சலுகையும் எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுப்பதன் மூலம் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ரயில்வே பயணங்களை முழுமையாகக் காகிதமில்லா பரிவர்த்தனைக்கு மாற்றும் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

