நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தாமதம் மற்றும் புயல் தாக்கத்தின் காரணமாகத் தள்ளிப்போன பனிக்காலம், தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளது. ஊட்டி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் (டிசம்பர் 10) இந்த ஆண்டின் முதல் உறைபனிப் பொழிவு தொடங்கியது. கடும் குளிரால் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக நவம்பரில் பனிக்காலம் தொடங்கும் நீலகிரியில், வடகிழக்குப் பருவமழையும் புயலின் தாக்கமும் காரணமாகப் பனிப்பொழிவு சுமார் ஒரு மாதம் தாமதமானது. தற்போது ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தலைக்குந்தா, குன்னூர் ஜிம்கானா மைதானம் போன்ற பகுதிகளில் அதிகாலை வேளையில் வெண்மையான உறைபனி படர்ந்து காணப்படுகிறது.சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும், வனப்பகுதிகளிலும் பனி படர்ந்துள்ளதால் நிலப்பரப்பு வெண்மையாகக் காட்சியளிக்கிறது.
இரவு முதல் அதிகாலை வரை பனியின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குளிரைத் தாங்க முடியாமல் மக்கள் அதிக அளவில் கம்பளி ஆடைகளை அணிவதுடன், ஆங்காங்கே தீ மூட்டிக் குளிர் காய்கின்றனர்.
இது குறித்துத் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அளித்த தகவலில், நேற்று உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலை 9°C ஆகப் பதிவாகியுள்ளது. காற்றில் ஈரப்பதம் 58 சதவீதமாக உள்ளது. அடுத்த சில வாரங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு செல்லும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

