கோவை செம்மொழிப் பூங்காவிற்கு பொங்கல் விடுமுறை நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
கோவை காந்திபுரம் பகுதியில், சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப் பூங்கா, விடுமுறை காலங்களில் மக்களின் முதன்மையான சுற்றுலாத் தேர்வாக உருவெடுத்துள்ளது. கடந்த 2025 நவம்பர் மாதம் தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 15 முதல் 18 வரை மட்டும் மொத்தம் 1,00,154 பார்வையாளர்கள் பூங்காவிற்கு வருகை தந்து சாதனை படைத்துள்ளனர். காணும் பொங்கல் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது.
தமிழர் பாரம்பரியமும் நவீனத் தொழில்நுட்பமும் கைகோர்க்கும் ஒரு கலைக்கூடமாக இப்பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு பசுமைப் புரட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் சங்க இலக்கிய மரங்கள், 1,000 வகை ரோஜாக்கள், ஐந்திணை வனம் மற்றும் கடையேழு வள்ளல்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அறிவுசார் வசதியாகத் தாவரங்களின் விவரங்களை எளிதில் அறிய உதவும் QR Code வசதி, குழந்தைகளைக் கவரும் VR கேம்ஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக விளையாட்டுப் பூங்கா என அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் பல சிறப்பம்சங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
நடைப்பயிற்சிக்கு ஏதுவான பிரத்யேக மண் நடைபாதைகள் மற்றும் இரவு நேரங்களில் ஜொலிக்கும் வண்ணமயமான மின்விளக்கு அலங்காரங்கள் என சர்வதேச தரத்திலான நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இப்பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பங்களுடன் வருவோருக்கு ஒரு சிறந்த பசுமை சுற்றுலாத்தலமாக இப்பூங்கா உருவெடுத்துள்ளது. கோவையின் ஒரு முக்கிய அடையாளமாகச் செம்மொழிப் பூங்கா மாறியுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் இதன் மூலம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

