கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுத் தொடர் விடுமுறையை முன்னிட்டு, “மலைகளின் அரசி” என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிரை அனுபவிக்க மக்கள் குவிந்து வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் நீலகிரி மாவட்ட வனத்துறை பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற அனுமதிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களைத் தவிர்த்து, தடை செய்யப்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைவதோ, ட்ரெக்கிங் செல்வதோ கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது.வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், வனப்பகுதிகளில் அனுமதியின்றி ட்ரோன் (Drone) கேமராக்களைப் பறக்கவிடுவதற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இளைஞர்கள் பலர் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காக, வனத்துறை அனுமதியில்லாத மற்றும் ஆபத்தான இடங்களுக்குச் சென்று வீடியோ எடுத்து, அவற்றை ‘Hidden Spots’ (மறைந்திருக்கும் இடங்கள்) என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பதிவிடுகின்றனர்.
இது மற்றவர்களையும் அந்த ஆபத்தான இடங்களுக்குச் செல்லத் தூண்டுகிறது என்றும், இதனால் மனித-விலங்கு மோதல்கள் அல்லது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வனத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனச்சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில் இயற்கையை ரசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

