2026-ம் ஆண்டு புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜனவரி 1 முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. வங்கிச் சேவைகள், எரிபொருள் விலை, அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் விவசாயிகள் நலத்திட்டங்கள் எனப் பல துறைகளில் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
வங்கித் துறையில் மிக முக்கிய மாற்றமாக, இனி வாடிக்கையாளர்களின் ‘கிரெடிட் ஸ்கோர்’ (Credit Score) விவரங்கள் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை என்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படும். இது கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்கள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC) உள்ளிட்ட வங்கிகள் தங்களது கடன் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளன. டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க யுபிஐ (UPI) மற்றும் சிம் கார்டு சரிபார்ப்பு விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 31-ம் தேதியுடன் 7-வது ஊதியக்குழுவின் பதவிக்காலம் முடிவடைவதால், ஜனவரி 1, 2026 முதல் 8-வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளது. விவசாயிகளைப் பொறுத்தவரை, பிஎம் கிசான் (PM Kisan) திட்டத்தில் பணம் பெற இனி அடையாள அட்டை கட்டாயமாக்கப்படலாம். மேலும், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY), காட்டு விலங்குகளால் பயிர்கள் சேதமடைந்தாலும் இழப்பீடு வழங்கப்படும் என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது; ஆனால், சேதம் நடந்த 72 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கணக்கு தொடங்குவதைக் கட்டுப்படுத்தப் புதிய வரைவு விதிகள் பரிசீலனையில் உள்ளன. மேலும், மாதம் தோறும் மாற்றியமைக்கப்படும் எல்பிஜி (LPG) கேஸ் சிலிண்டர் விலை மற்றும் விமான எரிபொருள் விலைகள் ஜனவரி 1 அன்று புதிய நிர்ணயத்துடன் வெளியாகும். இதுதவிர, டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்று மாசைக் குறைக்கப் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

