மாமல்லபுரத்தில் நாட்டிய விழா டிச. 21-ல் தொடக்கம் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய நாட்டிய விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த இந்த விழா, வரும் டிசம்பர் 21-ம் தேதி தொடங்கி, ஒரு மாத காலம் நடைபெறும் எனச் சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கடற்கரைக் கோயில் வளாகத்தில் இந்த நாட்டிய விழா நடைபெறுகிறது. நாள்தோறும் மாலையில் தொடங்கி இரவு வரை நடக்கும் இந்தத் திருவிழா, அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி வரையில் நீடிக்கும்.
இந்த விழாவில், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளன. பரத நாட்டியம், கதகளி, குச்சுப்புடி, ஒடிசி, மோகினியாட்டம் போன்ற செவ்வியல் நடனங்களுடன், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
இந்த நாட்டிய விழாவைக் காண உள்நாட்டுப் பொதுமக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக ஆர்வத்துடன் மாமல்லபுரத்தில் திரள்வது வழக்கம். விழாவுக்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் தீவிரமாகச் செய்து வருகிறது.

