சென்னை மாநகரின் மேற்குப் பகுதியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மதுரவாயல் முதல் வெளிவட்ட சாலை (ORR) வரையிலான 6 வழி உயர்மட்ட மேம்பாலக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் பலமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்த மெகா திட்டத்திற்கான டெண்டர், இறுதியாக வரும் மே 27 அன்று திறக்கப்படவுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) ஹைப்ரிட் அன்னுவிட்டி முறையில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், முதற்கட்டமாக மதுரவாயல் சந்திப்பில் தொடங்கி சென்னை வெளிவட்ட சாலை வரை சுமார் 8.135 கிலோமீட்டர் நீளத்திற்கு, தோராயமாக 991.61 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ளது.
இந்த மேம்பாலத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமே, இது அடுத்தகட்டமாக ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்கப்பட்டு, அங்கு அதிவேகமாகக் கட்டமைக்கப்பட்டு வரும் பெங்களூரு – சென்னை விரைவுச்சாலையுடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளதுதான். இதன் மூலம் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் வாகனங்களும், அங்கிருந்து சென்னைக்குள் வரும் கனரக மற்றும் பயணிகள் வாகனங்களும் நகரின் உள்வட்டச் சாலைகளின் டிராபிக்கில் சிக்காமல், நேரடியாக இந்த உயர்மட்டப் பாலம் வழியாகப் பயணிக்க முடியும்.
இந்த புதிய விரைவுச்சாலை அமைவதன் மூலம், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (NH-48) பயணிக்கும் வாகனங்களில் சுமார் 80 சதவீதம் உயர்மட்டப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் பகுதிகளில் உள்ளூர் டிராபிக் முழுமையாகக் குறைந்து நெரிசல் இல்லாத பயணம் சாத்தியமாகும். மேலும் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை போன்ற தொழிற்துறை மண்டலங்களில் உள்ள உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சென்னை துறைமுகத்திற்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கன்டெய்னர் லாரிகள் எவ்விதத் தடையுமின்றி 24 மணி நேரமும் பயணிக்க வழிவகை ஏற்படும்.
ஒட்டுமொத்தமாகச் சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கவுள்ள இத்திட்டம், சென்னையின் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு புதிய மைல்கல்லாக அமையப் போகிறது.

