மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 63-வது மலர்க் கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகள் இன்று (டிசம்பர் 12) பிரையன்ட் பூங்காவில் தொடங்கின.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய இடங்களில் ஒன்றான பிரையன்ட் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த மாபெரும் விழாவுக்காக, முதல் கட்டமாக சால்வியா, டெல்பீனியம், பென்ஸ்டமன் உள்ளிட்ட பல வகையான மலர்ச் செடிகளை நடும் பணி இன்று காலை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் நடராஜன் தலைமையில் தொடங்கப்பட்டது. உதவி இயக்குநர் பிரபு மற்றும் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த 63-வது மலர்க் கண்காட்சியில், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் மொத்தம் 75 வகையான மலர்ச் செடிகளை நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஜெரேனியம், சைக்லமன், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள், பிகோனியா, பேன்சி, பெட்டுனியா, சன்பிளவர், வயோலா உள்ளிட்ட அரிய மலர் வகைகளும் அடங்கும்.
இதற்காக ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விதைகள் பெறப்பட்டு, பூங்காவின் பல பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. மேலும், மலர்க் காட்சி மாடம் மற்றும் கண்ணாடி மாளிகை உள்ளிட்ட இடங்களில் 10,000 வண்ண மலர்ச் செடி தொட்டிகள் அடுக்கி வைக்கப்படும் எனத் தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

