கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. பலர் காயமடைந்தனர். இதையடுத்து, த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார், மேலும் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சமும் இழப்பீடாக அறிவிக்கப்பட்டது.
ஒரு வாரம் கடந்தும் கரூரில் சோகம் நீடிக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். விஜய், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில், கரூர் மக்களை நேரில் சந்திக்க வருவேன் என உறுதியளித்தார். ஆனால், அவர் உடனே செல்லாதது குறித்து கோர்ட்டும் கேள்வி எழுப்பியது. இதற்கிடையில், விஜய் 33 பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியானது.
த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், “விஜய் நேரில் சந்திக்க டிஜிபியிடம் அனுமதி கோரியுள்ளோம். இமெயில் மற்றும் நேரடி மனு மூலம் கோரிக்கை வைத்தோம்,” என்றார். தற்போது, விஜய் கரூர் செல்ல அனுமதி கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு, அவருக்கு பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

