மும்பை கடற்கரைச் சாலையில் வாகனங்கள் 80 கி.மீ. வேகத்தில் செல்லும்போது ‘ஜெய் ஹோ’ இசை ஒலிக்கும் இந்தியாவின் முதல் ‘இசை சாலை’ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மும்பை நரிமண் பாயிண்ட்டில் இருந்து ஓர்லி நோக்கிச் செல்லும் வடக்கு நோக்கிய கடற்கரைச் சாலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக ‘இசை சாலை’ (Music Road) எனும் வியக்கத்தக்கத் திட்டம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக அளவில் ஜப்பான், ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்குப் பிறகு இந்தியா இந்தப் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சாலை, ஹங்கேரிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலையில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ரம்பிள் பட்டைகளின் (Rumble Strips) மீது, வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்போது, டயர்களுக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் உராய்வின் மூலம் ‘ஜெய் ஹோ’ பாடலின் இசை வாகனத்திற்குள் ஒலிக்கும். வாகன ஓட்டிகளுக்கு உற்சாகத்தையும் தேசபக்தியையும் ஊட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சாலை, எதிர்காலத்தில் மும்பையின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

