‘தி ஹன்ட்ரட்’ தொடரில் இந்திய உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணிப்பதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கு முன்னாள் வீரர் மொயீன் அலி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தும் ‘தி ஹன்ட்ரட்’ (The Hundred) தொடருக்கான வீரர்கள் ஏலம் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகளில், இந்திய ஐபிஎல் உரிமையாளர்களுக்குச் சொந்தமான மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் அடங்கும். இந்த அணிகள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்றும், அவர்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும் பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய நிறுவனங்களின் இந்த முடிவுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயீன் அலி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். விளையாட்டு மைதானத்தில் இத்தகைய பாகுபாடுகளை இங்கிலாந்து மண்ணில் அனுமதிக்கக் கூடாது என்றும், சக வீரர்கள் அனைவரும் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) இந்த விவகாரத்தில் தலையிட்டு, திறமையான வீரர்கள் புறக்கணிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என மொயீன் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

