சென்னை மாநகராட்சியில் (Greater Chennai Corporation) பணிபுரியக் காத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் (NUHM) கீழ், காலியாக உள்ள சுமார் 309 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி மருத்துவம், செவிலியர், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த பல்வேறு துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறிப்பாக, 10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கும் சென்னை மாநகராட்சியில் பணிபுரிய இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி பணிக்குத் தகுந்தாற்போல மாறுபடுகிறது. மருத்துவ அதிகாரி, மருந்தாளுநர், லேப் டெக்னீசியன் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணிகளுக்கு அந்தந்த துறையில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அதே சமயம், அலுவலக உதவியாளர் (Office Assistant) மற்றும் பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker) ஆகிய பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பணியின் அடிப்படையில் மாதச் சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். குறிப்பாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிகளுக்கு ரூ.13,500-ம், அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.15,000-ம் சம்பளமாகத் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முற்றிலும் தற்காலிக அடிப்படையில் 11 மாத ஒப்பந்த காலத்திற்கு வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது; தகுதி, முன் அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான chennaicorporation.gov.in என்பதில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரியச் சான்றிதழ்களுடன் ஜனவரி 5, 2026 மாலை 5 மணிக்குள் ரீப்பன் மாளிகையில் உள்ள சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

