தமிழகத்தில் மழை மற்றும் பனிப்பொழிவு காலம் முடிவுக்கு வந்தது!
தமிழகத்தில் மழை மற்றும் பனிப்பொழிவு காலம் முடிவுக்கு வந்தது!
தமிழ்நாட்டில் நிலவி வந்த பனி மற்றும் மழையின் தாக்கம் குறைந்து, இனி வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் மட்டும் ஓரளவிற்கு மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால், மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் என்றும், வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் குளிர் மற்றும் பனிக்காலம் முடிவுக்கு வந்து, வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகக்கூடும். மேலும், வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றின் தாக்கம் இருக்கும் என்பதால், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வானிலை மாற்றங்களைக் கவனித்துச் செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

