உயர் அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் ஊடுருவலால் மத்திய இந்தியாவில் உருவாகும் குளிர் அலைகள் தமிழகத்தை எட்டும்; சென்னை மற்றும் வட தமிழகப் பகுதிகளில் தாக்கம் அதிகம் இருக்கும்.
தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் உயர் அழுத்த மாறுதல்களால், வட தமிழகம் மற்றும் சென்னை மாநகரப் பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று டிசம்பர் 12-ஆம் தேதி முதல் இந்த நிலை நீடிக்கும் என்றும், மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை கணிசமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வானிலை தகவல்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்), “வரும் டிசம்பர் 12-ஆம் தேதி உயர் அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் ஊடுருவல் ஏற்படும். மத்திய இந்தியா முழுவதும் இதனால் சிறிய குளிர் அலைகள் உருவாகும். இதன் தாக்கம் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும், வட தமிழகத்திலும் தீவிரமாக உணரப்படும்,” என்று கூறியுள்ளார்.
குளிர் அலை காரணமாக, மலைப் பகுதிகளிலும் உள் மாவட்டங்களிலும் வெப்பநிலை வெகுவாகக் குறையும். குறிப்பாக, உதகை மற்றும் கொடைக்கானலில் குறைந்தபட்ச வெப்பநிலை 5°C -க்குக் கீழே செல்ல வாய்ப்புள்ளது. அதேபோல், பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 10°C-லிருந்து 12°C-ஆகக் குறையும்.
வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட மற்றும் குளிரான வானிலை நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில் மேற்கு கடற்கரை நகரப் பகுதிகளில் மட்டும் இயல்புக்கு மாறாக அதிக வெப்பம் நீடிக்கும் என்றும் அவர் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

