நவீனத் தொழில்நுட்ப வேலைகளைத் துறந்து, மண்ணை நம்பி விவசாயத்தில் இறங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெருமாள்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி எம். முனிவேல், இயற்கை விவசாயத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் 10 ஆண்டுகள் பணியாற்றிய முனிவேல், ரசாயனமில்லாத இயற்கை உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தனது வேலையை விட்டுவிட்டு முழுநேர விவசாயியாக மாறினார். ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்த அவர், தற்போது வானம் பார்த்த பூமியில் காய்கறி சாகுபடி செய்து தினமும் ரூ. 3,000 வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
நீர்ப்பாசன வசதி குறைவாக உள்ள பகுதிகளில், புதிய நீர் மேலாண்மை முறைகளை ஏற்படுத்தி இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்கிறார். ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் காக்கப்படுவதோடு, விளைபொருட்களுக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
ஐடி வேலையை விட மண்ணோடு இணைந்து பணியாற்றுவது மனநிறைவைத் தருகிறது. சரியான திட்டமிடலும், இயற்கை விவசாய முறைகளும் இருந்தால் விவசாயத்தில் நிச்சயம் லாபம் ஈட்ட முடியும்,” என மற்ற இளைஞர்களுக்கும் இவர் ஊக்கமளித்து வருகிறார்.

