18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் ரீ-என்ட்ரி! ஜனவரியில் மின்சார டபுள் டக்கர்கள் சேவையில்!
சென்னை: டபுள் டக்கர் பேருந்துகள்…
ஒரு காலத்தில் சென்னையின் தெருக்களில் ஓடி, பயணிகளின் நினைவில் இடம்பிடித்தவை. 2008 க்குப் பிறகு நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள் — 18 ஆண்டுகளுக்குப் பிறகு — மீண்டும் சென்னைக்குத் திரும்பவுள்ளன!
போக்குவரத்து துறை தகவல் படி, வருகிற ஜனவரி முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளன. முதல் கட்டமாக 20 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் சாதாரண மின்சார பேருந்துகளை விட 1.5 மடங்கு அதிகம், சுமார் 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதால், நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்களில் பயணிகள் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதிகளில் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் மக்கள் கூடுதல் நன்மை பெறுவார்கள்.
ஏற்கெனவே பிராட்வே — தாம்பரம் வழித்தடத்தில் மின்சார டபுள் டக்கர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, அதன் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் தயாரிக்கும் இதே பேருந்துகள் மும்பை, ஐதராபாத் நகரங்களிலும் ஓடுகின்றன.
திட்டம் முடிவடைந்தவுடன், சென்னையின் பேருந்து சேவையில் புதிய அனுபவத்தை தரும் இந்த டபுள் டக்கர், மீண்டும் நகரத்தின் அடையாளமாக வரப்போகிறது என்பதில் பயணிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

