Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

தேர்தல் பத்திரங்கள்: ஒரு ரூபாய் கூட நன்கொடை பெறாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

BJP - CPM - Cong Flags

ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் ஆண்டுதோறும் தேர்தல் பத்திரங்கள் மற்றும் இதர நன்கொடைகள் மூலம் எவ்வளவு தொகை கிடைத்தன என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடுவது வழக்கம். அதன்படி கடந்த 2023-2024 ஆம் ஆண்டில் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பாஜக-வுக்கு முதலிடம்

இதில், 2023-24 ஆம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை 83 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் ரூ.2,360 கோடி நன்கொடை பெற்ற பாஜக, கடந்த ஒரே ஆண்டில் ரூ.4,340.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.1,685.6 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது. அதாவது, மொத்த நிதியில் தேர்தல் பத்திரம் மூலம் 43 சதவீதம் நன்கொடையை பெற்றிருக்கிறது.

அதே நேரம் 2022-2023 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.1,294.14 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. இதன் மூலம் முந்தைய ஆண்டை விட 61 சதவீதம் அதிகம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. செலவுகளை பொறுத்தவரையில் 2022-2023 ஆம் ஆண்டில் பா.ஜ.க. ரூ.1,092.15 கோடி செலவு செய்துள்ளது. அதே நேரம் 2023-2024-ல் ரூ.1,754.06 கோடியை செலவு செய்துள்ளது. இதில் விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.591.39 கோடி செலவு செய்துள்ளது.

காங்கிரஸ்

இதே கால கட்டத்தில் காங்கிரசின் வருமானம் ரூ.452.4 கோடியில் இருந்து 170 சதவீதம் அதிகரித்து ரூ.1,225 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 2022-2023 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.268.62 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. அதே நேரம் 2023-2024 ஆம் ஆண்டில் இந்த நன்கொடை ரூ.1,129.66 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 320 சதவீதம் அதிகமாகும்.

2022-2023 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி, நன்கொடைகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.171 கோடி பெற்றிருந்தது. 2023-2024 ஆம் ஆண்டில் இந்த நன்கொடை ரூ.828.36 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 73 சதவீதம் அதிகமாகும்.

ஒரு ரூபாய் கூட பெறாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரு ரூபாய் கூட பெறாத கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளது.

அதேபோன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருமானம், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.646.39 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் சுமார் 95% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆகும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன்னதாக தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், 2023-2024 ஆம் ஆண்டுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக பாஜக இருந்தது. 2019 ஏப்ரல் முதல் இந்தத் திட்டம் ரத்து செய்யப்படும் வரை விற்கப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களில் பாதியை, அதாவது ரூ. 6,060 கோடியைப் பெற்றது பாஜக தான். அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் ரூ. 1,609.53 கோடியும், காங்கிரஸ் ரூ. 1,421.87 கோடியும் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version