Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 2026-27!

New Project (4)

விருதுநகர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் நல்வாழ்வையும், அவர்களின் எதிர்கால உயர் கல்வியையும் உறுதி செய்யும் நோக்கில் “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்” கீழ், 2026-2027 நிதியாண்டிற்கான புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வைப்புத்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000/- தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000/- வீதம் மொத்தம் ரூ.50,000/- தொகையும், சிறப்பு நேர்வுகளின் கீழ் மூன்று பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000/- வீதம் மொத்தம் ரூ.75,000/- தொகையும் அக்குழந்தைகளின் பெயரில் நீண்ட கால வைப்புத்தொகையாக அரசு முதலீடு செய்யும்.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வைப்புத்தொகை ரசீது மற்றும் குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி முதிர்வுத் தொகையை வட்டியுடன் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கக் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும்.

தகுதியுடைய பொதுமக்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் வயதுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்பக் கட்டுப்பாடு சான்றிதழ், ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்களின் அருகிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Exit mobile version