தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை அண்மையில் உயர்த்தியுள்ள நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) மலிவு விலையில் அதிரடி திட்டங்களை வழங்கி வாடிக்கையாளர்களைப் பெரும் அளவில் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 4ஜி சேவையை அறிமுகம் செய்ததுடன், கூடிய விரைவில் 5ஜி சேவையையும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு பிரத்யேகமான ப்ரீபெய்ட் திட்டங்களைச் சந்தையில் முன்னிறுத்தியுள்ளது.இதில் முதன்மையானதாகக் கருதப்படும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டமானது, பயனர்களுக்குத் தினமும் 3ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், ஒட்டுமொத்தமாக 210ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தினசரி டேட்டா எல்லை முடிந்த பிறகும், இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்பட்டுத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகளுடன் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் இதில் அடங்கும்.
அதேபோல், ஆண்டு முழுவதும் டேட்டா கவலை இல்லாமல் இருக்க விரும்பும் பயனர்களுக்காக ரூ.2399 என்ற நீண்ட காலத் திட்டத்தையும் பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2ஜிபி டேட்டா வீதம் மொத்தம் 730ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதிலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் உண்டு.
குறைந்த பட்ஜெட்டில் நீண்ட நாட்களுக்கு அதிக டேட்டா மற்றும் அழைப்பு வசதிகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, தனியார் நிறுவனங்களின் திட்டங்களை விடப் பிஎஸ்என்எல்-லின் இந்தச் சலுகைகள் ஒரு சிறந்த மாற்றாக அமைந்துள்ளது.

