காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர் ரோஜாக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளதால், ஒரு கட்டு 800 ரூபாய் வரை விற்பனையாவதைக் கண்டு விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில்கள் மூலம் ரோஜா சாகுபடி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் (அடர் சிவப்பு), கோல்ட் ஸ்டிரைக், நோப்ளாஸ், அவலஞ்சர், சவரன், பெர்னியர் எனச் சுமார் 22 வகையான ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்காக இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
சமீபகாலமாகச் சர்வதேச சந்தையில் நிலவும் கடும் போட்டி மற்றும் விமானக் கட்டண உயர்வு காரணமாக, விவசாயிகள் வெளிநாட்டு ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்டு உள்நாட்டு வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 2026 காதலர் தினத்தை முன்னிட்டு, ஓசூர் ரோஜாக்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் குவிந்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
20 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு: இது குறித்து ரோஜா உற்பத்தியாளர்கள் கூறுகையில், “வழக்கமாக 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா 150 ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால், தற்போது தேவை அதிகரிப்பு மற்றும் சாகுபடி பரப்பு குறைவு காரணமாக, ஒரு கட்டு ரோஜா 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய விலை உயர்வாகும். முன்னதாக தினசரி 2 லட்சம் மலர்கள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது நாளொன்றுக்கு 10 லட்சம் மலர்கள் வரை அனுப்பப்படுகின்றன,” எனத் தெரிவித்தனர்.
மொத்த விற்பனையில் சிம்ம சொப்பனமாக விளங்கும் ‘தாஜ்மகால்’ ரக ரோஜாக்கள், இம்முறை 80 சதவீதத்திற்கும் மேலான ஆர்டர்களைக் குவித்து முதலிடம் பிடித்துள்ளன. வெளிநாட்டு ஏற்றுமதி சரிந்தாலும், உள்நாட்டில் கிடைத்துள்ள இந்த அதீத வரவேற்பும் லாபகரமான விலையும் ஓசூர் பகுதி விவசாயிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

