2025-ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழ் திரையுலகம் சந்தித்த மாற்றங்களும் அதிர்வுகளும் பேசுபொருளாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சினிமாவில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்வது வழக்கம் என்றாலும், இந்த ஆண்டு சிறு பட்ஜெட் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. ஆனால், மறுபுறம் திரையரங்க உரிமையாளர்கள் இந்த ஆண்டை ஒரு பெரும் வீழ்ச்சியாகவே கருதுகின்றனர். டிசம்பர் 25-ம் தேதி வெளியான ‘ரெட்ட தல’ மற்றும் ‘சிறை’ படங்களுடன் இந்த ஆண்டின் ரிலீஸ் கணக்குகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த கோலிவுட் வணிகம் ஒரு கலவையான சூழலையே பிரதிபலிக்கிறது.
இந்த ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கை மற்றும் லாபம் குறித்து சினிமா வணிக ஆய்வாளர் தனஞ்செயன் குறிப்பிடுகையில், 2025-ல் மட்டும் மொத்தம் 285 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது எண்ணிக்கையில் மிக அதிகம் என்றாலும், அதில் 35 திரைப்படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபகரமானதாக அமைந்துள்ளன. குறிப்பாக, தியேட்டர்களில் பெரிய வரவேற்பு பெறாத சில படங்கள் கூட ஓடிடி (OTT) மற்றும் டிஜிட்டல் உரிமம் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளன. இன்றைய சூழலில், ஒரு தயாரிப்பாளருக்கு தியேட்டர் மூலம் 20 சதவீத வருவாயும், ஓடிடி பிசினஸ் மூலம் சுமார் 38 சதவீத வருவாயும் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இது சினிமா வணிகத்தின் தளம் தியேட்டர்களில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாறிவருவதை உறுதிப்படுத்துகிறது.
திரையரங்க உரிமையாளர்களைப் பொறுத்தவரை, 2025-ம் ஆண்டு ஒரு கசப்பான அனுபவமாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், கடந்த 100 ஆண்டுக்கால தமிழ் சினிமா வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் மிகவும் மோசமான ஆண்டு என்று வேதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தியேட்டருக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை (Footfall) சுமார் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு தியேட்டர்களில் சோபிக்காததே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும். இருப்பினும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘மாமன்’, ‘தலைவன் தலைவி’, ‘டிராகன்’ போன்ற படங்கள் தியேட்டர்களுக்கு ஓரளவு உயிர் கொடுத்தன.
இந்த வீழ்ச்சிக்கு பின்னணியில் பல முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, படம் திரையரங்கில் வெளியான நான்கு வாரங்களுக்குள்ளேயே ஓடிடியில் வெளியாவது மக்கள் தியேட்டருக்கு வருவதைக் குறைத்துள்ளது. மலையாளம் மற்றும் இந்தித் திரையுலகில் பின்பற்றப்படும் 8 வார கால இடைவெளி முறையை இங்கும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், கதை பலமில்லாத பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் கடுமையான தனிநபர் விமர்சனங்களும் வசூலைப் பாதிப்பதாகக் கருதப்படுகிறது. மக்கள் ‘கண்டென்ட்’ இருந்தால் மட்டுமே தியேட்டருக்கு வருவோம் என்பதை 2025-ல் நிரூபித்துவிட்டனர். இந்த மாற்றங்களை உணர்ந்து தயாரிப்பாளர்கள் செயல்பட்டால், 2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு பொற்காலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

