ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் ஜெமினி இணைந்து இந்திய இளைஞர்களுக்காக புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமான முன்னேற்றம் நிகழும் நிலையில், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஜியோ பயனாளர்களுக்கு 18 மாதங்கள் முழுவதும் ஜெமினி ப்ரோ ஏஐ சந்தாவை இலவசமாக வழங்கும் ‘ஜியோ யூத் ஆஃபர்’ தற்போது அறிமுகமாகியுள்ளது. அக்டோபர் 30 முதல் செயல்பாட்டுக்கு வந்த இந்த திட்டம் ஒரு முறை ₹349 அல்லது அதற்கு மேற்பட்ட அன்லிமிடெட் 5G ரீசார்ஜ் செய்தாலே கிடைக்கிறது.
சுமார் ₹35,100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ சந்தாவை இலவசமாக வழங்குவது தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆஃபர் மூலம் ஜெமினி 2.5 ப்ரோ, ப்ளஸ், டீப் ரிசர்ச் போன்ற மேம்பட்ட ஏஐ அம்சங்கள் கிடைப்பதுடன், 2TB கூடுதல் கிளவுட் ஸ்டோரேஜும் இலவசமாக வழங்கப்படுகிறது.
சினிமா தரத்திலான வீடியோக்களை உருவாக்க உதவும் Veo 3 Fast வசதியையும், சமீபத்தில் வைரலான ‘நானோ பனானா’ போன்ற படங்களை உருவாக்கும் திறனையும் இந்த சந்தா வழங்குகிறது.
இந்தியாவில் ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் ஏஐ சந்தாவை இலவசமாக வழங்க தொடங்கிய நிலையில், ஜியோவின் இந்த திட்டம் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் மட்டும் 32.49 லட்சம் புதிய மொபைல் சந்தாதாரர்களை சேர்த்த ஜியோ, மொத்தத்தில் 50.64 கோடி யூசர்களை எட்டியுள்ளது. புதிய யூத் ஆஃபர் மூலம் ஜியோ தனது இளம் பயனாளர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் இருக்கும் நிலையில், இது டெலிகாம் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

