சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான முக்கியமான மின்சார ரயில் பாதை இணைப்புப் பணிகள், 17 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சட்டச் சிக்கல்களால் நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த இந்தப் பணிகள், 2022-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
சோதனை ஓட்டம்: பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரையிலான 5 கிலோ மீட்டர் தூரப் பாதையில் ரயில்வே அதிகாரிகள் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த நவம்பர் 7-ம் தேதி 10 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் முதற்கட்டச் சோதனை நடைபெற்றது.
தற்போது, சரக்கு ரயில் பெட்டிகளை இணைத்து மீண்டும் ஒரு சோதனை நடத்தப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், அடுத்த கட்டமாக இந்தப் பாதையில் மின்சார ரயில் இயக்கியும், அதன்பின்னர் பாதுகாப்பு கமிஷனர் முன்னிலையில் அதிவேக ரயில் இயக்கியும் இறுதிச் சோதனை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தனர். இந்தச் சோதனைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய இணைப்பு, தெற்கு ரயில்வே பயணிகளுக்குப் போக்குவரத்து வசதியை எளிதாக்கும் என நம்பப்படுகிறது.

