தொடர்ச்சியான மழையால் நெல்மணிகள் சேதமடைந்துள்ள நிலையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் உழைப்பின் பலனான நெல்மணிகள் மழையில் நனையாமல் இருக்க, அரசு உடனடி தலையீடு செய்திருக்க வேண்டியதாயிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
“முதன்முறையாக நெல்மணிகள் வீணாகியபோதே அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு அரசு தான் வீணாக்கியுள்ளது. இது ஒரு ஆண்டின் பிரச்சனை அல்ல; ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வது மிகவும் வேதனையானது,” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “விவசாயிகளின் நெல் மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு ஏன் வீணாக்குகிறது? பருவமழையால் பயிர்கள், விளைநிலங்கள் சேதமடையாமல் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
விவசாயிகளின் நலனுக்காக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சனைகள் மீண்டும் உருவாகாமல் தடுக்க தீர்வு வழங்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினார்.

