நாடு முழுவதும் சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT – CAA) அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நேற்று அரசிதழில் வெளியிட்டு, அதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதுமுள்ள சிறுபான்மையின மக்கள், எதிர்க்கட்சிகள் எனப் பலரும் கடும் விமர்சனம் செய்து வருவதோடு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சி.ஏ.ஏ சட்டம் தமிழ்நாட்டில் நுழையாது; அதனை அமல்படுத்தவும் மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

‘சிஏஏ சட்டத்தால் எந்த நன்மையும் இல்லை’
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய பாஜக அரசின் இத்திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு இடம்கொடுக்காது என்றும் உறுதிபட தெரிவித்துள்ள அவர், மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசரகதியில் ஒன்றிய அரசு. சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும், சி.ஏ.ஏ சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ பயனோ இருக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
“நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பாஜக அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டது.
இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.
‘மக்களைத் திசைதிருப்பும் நோக்கம்’
இதன் காரணமாகத்தான், கழக அரசு அமைந்தவுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ எனக் கருத வேண்டியிருக்கிறது.
இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும்.
எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.