இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சியில் மேலும் ஒரு பொற்குறியை பதித்து, இஸ்ரோ சிஎம்எஸ்–03 (CMS-03) எனும் அதிநவீன, மிக உயர்ந்த எடையுடைய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. 4,410 கிலோ எடை கொண்ட இந்த மகத்தான செயற்கைக்கோளை ஏவியதன் மூலம், இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து எல்விஎம்-3 எம்5 ராக்கெட் (LVM3-M5) நேற்று மாலை 5.26 மணிக்கு புறப்பட்டது. 43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட், 18,000 கிலோ வரை ஏந்திச் செல்லும் திறனுடையதால் ‘பாகுபலி ராக்கெட்’ என அழைக்கப்படுகிறது. ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, CMS-03 தனது சரியான புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
4,410 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை இந்தியாவிலிருந்தே அனுப்பியது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு, இத்தகைய அதிக எடையுள்ள செயற்கைக்கோள்கள் வெளிநாட்டில் உள்ள ஃப்ரெஞ்ச் கயானாவில் இருந்து வேறு நாட்டு ராக்கெட்டுகள் மூலம் அனுப்பப்பட்டன. இஸ்ரோவின் திறமையை உலகிற்கு நிரூபிக்கும் முக்கிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
₹1,600 கோடி செலவில் உருவாக்கப்பட்ட CMS-03 செயற்கைக்கோள், இந்திய கடற்படைக்கு தேவையான பாதுகாப்பு தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்ற சேவைகளுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட உள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து
இந்த சாதனையைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நமது விண்வெளித் துறை தொடர்ந்து நம்மை பெருமைப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான CMS-03 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நமது விஞ்ஞானிகளின் திறமை, புதுமை மற்றும் அர்ப்பணிப்பு இந்திய முன்னேற்றத்தை மேலும் வளர்க்கிறது,” என பதிவிட்டுள்ளார்.
இந்த CMS–03 சாதனை, இந்திய விண்வெளித் துறையின் வேகமான முன்னேற்றத்தை உலகிற்கு மீண்டும் நிரூபிக்கிறது.

