தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (TIDCO), ஒண்டிப்புதூர் அருகே 20.72 ஏக்கரில் உலக தரமான கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரியுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 24.
இந்த திட்டம் அரசு–தனியார் கூட்டுத்திட்ட முறையில் செயல்படுத்தப்படுகிறது. மைதானத்துடன் சேர்த்து 10 ஏக்கரில் வணிக வளாகமும் அமைக்கப்படும். புதிய மைதானம் பகல் மற்றும் இரவு போட்டிகள் நடைபெறும்படி நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்படுகிறது. பெரிய இசை நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தும் திறன் மைதானத்திற்கு இருக்கிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மக்களவைத் தேர்தலில் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதாக வாக்குறுதி அளித்தார். அதனை தொடர்ந்து நான்கு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இறுதியாக ஒண்டிப்புதூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விமான நிலைய ஆணையத்தின் தடையில்லா சான்று ஏற்கனவே கிடைத்துள்ளது.
30,000 பேர் அமரக்கூடிய இந்த மைதானம், சுமார் ₹500 கோடி முதலீட்டில் கட்டப்பட்டு, 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் கோவை, சர்வதேச கிரிக்கெட், IPL மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தக்கூடிய புதிய விளையாட்டு மையமாக உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

