மகளிர் கிரிக்கெட்டில் சாதனையை படைத்து, இந்திய அணி 13வது மகளிர் உலகக்கோப்பையில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றில் பொற்குறியை பதித்துள்ளது. நவி மும்பை டி. ஒய். பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. 299 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பையை வென்றது.
இந்த வரலாற்றுச் சாதனை இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய மைல்கல்லாக திகழ்கிறது. 52 ஆண்டுகளாக உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி இரண்டு முறை மட்டுமே இறுதிப் போட்டியை எட்டியிருந்த நிலையில்,கோப்பையை கைப்பற்றி புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டம் நிலவியது. பல நகரங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். சமூக வலைதளங்களில் வாழ்த்துச் செய்திகள் குவிந்தன. முன்னாள் வீரர்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வீராங்கனைகளின் வரலாற்று சாதனையைப் பாராட்டினர்.
இந்த வெற்றி, இந்தியாவில் வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், இந்திய அணி வீராங்கனைகளுக்கு பிசிசிஐ ₹51 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது; மேலும் ஐசிசி தரப்பில் ₹39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உலகக்கோப்பை வெற்றி, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் புதிய யுகத்தை துவக்கிய தருணமாகும். நாடு முழுவதும் “இந்தியா சாம்பியன்” என்ற கோஷம் முழங்கிய பெருமை நாளாக இது பதிந்துள்ளது.

