தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனத்தில் பெரிய ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்தாண்டு, உதவி பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் 1.12 லட்சம் பேர் பங்கேற்று, முடிவுகள் வெளியிடப்பட்டு நியமனங்களும் செய்யப்பட்டன.
ஆனால், இத்தேர்வில் மிகப்பெரிய லஞ்ச மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.அமைச்சர் நேருவின் சகோதரர் தொடர்புடைய நிறுவனத்தில் நடந்த ஹவாலா பண பரிமாற்ற சோதனையின் போது, இந்த பணி நியமன ஊழல் தொடர்பான ஆவணங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அவற்றை ஆய்வு செய்தபோது, தேர்வில் பங்கேற்ற சிலர் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து பணி நியமனம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான 232 பக்க அறிக்கையில் 150 தேர்வர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அறிக்கையில், சில அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உதவியாளர்கள் தேர்வின் ரகசிய தகவல்களை முன்கூட்டியே அறிந்து, பணம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லஞ்சமாக பெற்ற பணம் ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.இதன் விளைவாக, நேர்மையாக தேர்வை எதிர்நோக்கிய பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் ஏமாற்றப்பட்டனர்.அமலாக்கத்துறை, இந்த வழக்கில் முழுமையான விசாரணை அவசியம் என்றும், மாநில போலீஸ் முதலில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

