Amazing Tamilnadu – Tamil News Updates

தொழில் புரட்சியை நோக்கி தமிழ்நாடு… ரூ. 8.65 லட்சம் கோடி முதலீடுகள்… 30 லட்சம் வேலைவாய்ப்புகள்!

ருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து, அதற்கான முனைப்புடன் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17, 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில் 7 , 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன

2022 ஆம் ஆண்டில், ஆண்டுவாரி முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெற்றபோது ஆசிய- ஒசியான மண்டலத்திற்கான சிறந்த முதலீட்டு நிறுவனத்திற்குரிய விருது தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. புதிய தொழில் முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்கள் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டைப் பெரிய அளவில் தொழில்மயமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் 45,000 ஏக்கர் பரப்பளவில் நில வங்கி உருவாக்கப்படுகிறது. இதற்காக, சிப்காட் நிறுவனம் ஏறத்தாழ 33,489 ஏக்கர் நிலம் தெரிவு செய்துள்ளது. இதில், 22,941 ஏக்கர் நிலம் அரசின் நிருவாக அனுமதி பெற்று கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவை ஒருபுறம் இருக்க, கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் (GIM2024) மூலம் மொத்தம் ரூ. 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 26 லட்சத்து 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டிற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்துக்கு மேலும் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்றார். இந்த பயணத்தின் மூலம், அங்குள்ள தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் 3,440 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பல ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74, 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படித் தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுடன், ஒப்பந்தங்கள் தொழில் நிறுவனங்களாக உருப்பெறத் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக, முதலமைச்சர் மற்றும் தொழில் துறை அமைச்சர் தலைமையில் குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தொடர் நடவடிக்கைகளின் மூலம் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆட்சிக்கு வந்த பின்னரான 33 மாத கால ஆட்சிக்காலத்தில் கையெழுத்தான பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் 8.65 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி, தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் தொழிற் புரட்சிக்கான அடித்தளத்தை ஆழமாக போட்டுள்ளது என்றே முதலீட்டாளர்களும், தொழில் நிறுவனங்களும் கருதுகின்றனர்.

Exit mobile version